காதல் சதுரங்கம்!
எதிரும் புதிருமாய் இருப்பதிலேயே பாதி
இளமை கற்பூரமாய் கரைந்து விடுகிறது.
நீ, நான், நம் நினைவுகள் சாட்சியாக
நித்தம் நடைபெறுகிறது காதல் சதுரங்கம்!
அழகாய் அணி வகுத்து வைத்திருப்பதை உன்
பார்வைக் கணையால் கலைத்து விடுகிறாய்.
அதையும் மீறி வீரர்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்தால்,
அழகு சிரிப்பொலிக்கு அனைவரும் சரணாகதி!
நிலம் பறிக்கும் பாய்ச்சல் குதிரைகள் எல்லாம்
உனைக்கண்டதும் காய்ச்சலில் படுத்து விடுகின்றன!
மோதியும் அசையாத யானைக் குன்றுகள் எல்லாம் உன்
மதுரக் குரல் முன்னே குழந்தையாகி மண்டியிடுகின்றன!
என் மதியூக மந்திரி மயங்கியேக் கிடக்கிறார் அருகில்.
உன் பார்வை வாளால் வெட்டப்பட்ட என் நினைவுகளைப் பார்!
இந்த காதல் சதுரங்கம் எனக்கு ஒரு பாடம் கற்றுத்தந்தது.
வெற்றிப்பெற வரும் வாய்ப்புகளை நழுவ விடுவதுதான்!
எனை வெல்ல வேண்டும் என்ற நினப்பில் எனை நீ நெருங்குவாய்.
அந்தக் கணத்திற்காக நான் தினமும் நூறு முறை தோற்கத் தயார்!
பாகம்பிரியாள்.