Monday, February 23, 2009

முரண்

நான் சிறிய பூதான் பிடிக்கும் என்றால்,
நீயோ வண்ண ரகளையான ஆரஞ்சும், மஞ்சளும்தான் பிடிக்கும் என்கிறாய்.
நான் காலாற நடந்து போவதுதான் சுகம் என்றால்,
நீயோ படபடவென்று போகும் வாகனம்தான் என் தேர்வு என்கிறாய்.
நான் நம் நினைவுகளை அடுக்கி வைத்தால்,
நீயோ விசிறி வாழை போல் அதைப் பரப்பி வைக்கிறாய்.
நான் நம் நினைவுகளைக் கோர்க்க ஊசியும் நூலுமாய் வந்தால்,
நீயோ வார்த்தைக் கத்திரியால் வகை வகையாய் வெட்டுகிறாய்.
நான் நீர் போலுன்னை நேசமாய் நெருங்கி வந்தால்,
நீயோ நெருப்பலைகளையே வீசுகிறாய்.
நான் நினைவுக் குளத்தை மௌனமாய் ரசித்துக்கொண்டிருந்தால்,
நீயோ(யே) கல்லாய் விழுந்து எனைச் சிதற வைக்கிறாய்.
சிறு சண்டைக்குப் பின் சமாதானம் பேச
சல்லடையாய் சலித்து நல்லவற்றைத் திரட்டி வந்தால்,
நீயோ முறம் வைத்து வேண்டாத நினைவுகளைத் தூற்றுகிறாய்.
நான் இனிப்புத்தான் எனக்குப் பிடிக்கும் என்றால்,
நீயோ காரம் தின்று காபி குடியுங்கள், அதன் சுவையே தனி என்றாய்.
நீயும் நானும் இப்படி முரண்படுவதால்தான்
ஒருவரை ஒருவர் நினைக்கிறோமோ?
ஆமாமாம். எதிர்முனைகள்தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும்!

No comments:

Post a Comment