Monday, February 23, 2009

அம்மாவின் புடவை


அடுக்கி வைத்த நினைவுகளை கலைத்தது 
அலமாரியிலிருந்து நழுவிய அம்மாவின் புடவை! 
பதமாய் வந்த துணியின் வாசம் இன்றைக்கும் 
பொக்கிஷமாய் மனதில் பதுங்கியிருக்கும்! 
இஸ்திரிப்பெட்டி இல்லா காலம் நித்தம் 
அதன் இருமுனைப் பிடிக்க அடிபிடி யுத்தம்! 
அழகாய் நீவி மடித்து வைப்பதில் கிடைக்கும் 
அருமைப்பரிசாய் அம்மாவின் அன்பு முத்தம்! 
கட்டமும் வட்டமும் கண்டு கொள்ள  உதவும் 
கணிதப்பலகையாய் ஆனது அழகுப்புடவை.! 
கண்ணீரோடு கசப்பையும் துடைக்கும் கலையை 
கச்சிதமாய் கற்றுத் தந்ததில்  அது எங்கள் ஆசான்! 
பழுப்பேறிய முந்தானையில் முடிந்த காசு 
பால் ஐசாகவும், பஞ்சு மிட்டாயாகவும் இனித்தது. 
எங்களோடு புடவையும்,  பாலும் மோரும் சுவைத்து 
அழகுப் பாப்பாவிற்கு ஏணையாகிப் போனது! 
சுருக்கம் பல வந்தாலும், வருடம் பல போனாலும் 
நெருக்க இழை விலகாமல் நெருக்கிப் பிடித்தது ! 
மீண்டும் புடவையை வருடும் விரலுக்கு புரிபட்டது 
மறைந்திருந்த பாசமும் அம்மாவின்  வாசமும்!
 

1 comment:

  1. மிகவும் அழகான நேசம் மிகுந்த கவிதை.

    ReplyDelete